சென்னைஓபன் டென்னிஸ்போட்டியில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதிய இந்திய வீரங்கனை அங்கீதா தோல்வியடைந்தார்.
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.