தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டு தற்போது மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 15ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்ப்பில் டிசம்பர் 16ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும், டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.