எத்தனையோ பேராசிரியர்கள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.. எத்தனையோ இனப் போராளிகளை உலகம் கண்டுள்ளது. ஆனால் யாருக்குமே கிடைக்காத தனிச் சிறப்பு, உயர் அடை மொழி ஒன்று, மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மட்டுமே உண்டு.
“இனமான பேராசிரியர்” என்பதுதான் அந்த பெயர். முதல்வர் இருக்கையை அலங்கரித்த, சிறந்த பேச்சாளர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோருக்கு வழங்கப்படாத இந்த அடை மொழி பேராசிரியர் அன்பழகனுக்கு மட்டும் பொருந்தும்.
முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன், இந்த உணர்வுகள் நான் சாகிற வரை என்னோடு தான் இருக்கும்” என தொண்டர்களுக்கு “கொள்கைப்பாடம்” நடத்தியவர்.
அவரது இரண்டாவது நினைவு நாளில் பேராசிரியர் அன்பழகனை நினைவு கொள்வதில் பெருமை கொள்கிறது அரசியல் டுடே.