தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் இந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வரும் 16 மற்றும் 17-ந்தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது, வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் வங்கி சேவை முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும். 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் 80 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 75 ஆயிரம் கிளைகள் மூடப்படும். இதனால் வங்கி சேவை முழுமையாக பாதிக்கக்கூடும்.
இது குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. வங்கி ஊழியர்களின் ஒற்றை கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும். சமரசம் ஏற்படாத பட்சத்தில், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் கூறினார்.