• Sat. Apr 20th, 2024

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் – முப்படை தலைமை தளபதி நிலை என்ன?

Byமதி

Dec 8, 2021

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ராணுவ அதிகாரிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பலியான 4 பேரும் டெல்லியை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது.

மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 5 பேர் பற்றிய விவரங்கள் உடனடியாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை.

மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *