4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தை சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.