• Mon. Apr 21st, 2025

இந்தியாவில் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிப்பது உறுதி- அமித்ஷா நம்பிக்கை!

ByP.Kavitha Kumar

Apr 1, 2025

2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது நாடு ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முன்னேற்றமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12 -ல் இருந்து வெறும் 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மோடி அரசாங்கம் நக்சலிசத்தை இரக்கமற்ற அணுகுமுறையுடனும், பரவலான வளர்ச்சிக்கு இடைவிடாத முயற்சிகளுடனும் வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்கி வருகிறது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவின் பதிவை டேக் செய்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திறமையான செயல்பாடு காரணமாக நக்சலிசம் அதன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளன. இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய இந்தியாவின் இரும்புக்கரம் அணுகுமுறை. மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100 சதவீத நக்சலைட் இல்லாததாக மாறும்: என்று தெரிவித்துள்ளார்.