முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்த தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவரது உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.