கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என நேற்று எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
இந்த திட்டம் பயண நேரத்தை வெகுவாக குறைக்க உதவும். திருவனந்தபுரம் -காசர்கோடு இடையே பயணம் செய்ய ஆகும் நேரம் கிட்டத்தட்ட 16 மணி நேரமாக உள்ள பயண நேரம், இந்த திட்டம் மூலம், திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு 4 மணி நேரத்தில் சென்றடையலாம் என்று தெரிவித்தார்.மேலும், இந்த திட்டம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறினார்.
இந்த திட்டத்துக்கு 1,383 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் இந்த விளக்கத்துக்கு பின் எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.