• Fri. Apr 26th, 2024

அதிமுக மாஜி முக்கிய புள்ளி திமுகவுக்கு வர போறாரா..?

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்..
அத்துடன் அவர் யாருக்காக புகார் மனு அளித்துள்ளார் என்கிற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் சொல்லி, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 4 வார காலமாக தலைமறைவாக இருந்த அவரை கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்.. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளதாவது: கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார். மேலும், “இது எஸ்பி வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது… தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும்” என்று ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். தொண்டாமுத்தூர் வரும்போது ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு அன்று அமைந்திருந்தது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து, முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தினார் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்… பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, “திமுக தலைவர் முக ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார்.. கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை… இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்போது புகார் தந்துள்ளேன்” என்றார். புகழேந்தி போலீசில் தந்துள்ள புகார் மனுவும், அதை தொடர்ந்து அவர் அளித்துள்ள பேட்டியும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டவர் மூத்த தலைவர் புகழேந்தி.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே இத்தனை காலமும் கருதப்படுபவர்.. இவரை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, எப்படியும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மற்றொரு புறம், புகழேந்தி ஒருவேளை திமுக பக்கம் தாவுவாரோ என்றும் கணிக்கப்பட்டது.. இவை இரண்டுமே நடக்கவில்லை.. இத்தனை நாட்களும் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது திடீரென புகழேந்தி ஸ்டாலினுக்காக பரிந்து பேசியுள்ளதும், அது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளதும் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. அப்படியானால் திமுக பக்கம் இவர் சாய்வாரா என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு வருகிறது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *