விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சியில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ஊராட்சி பொதுக்கிணற்றில் தண்ணீர் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

பொதுக்கிணற்றிலன் தடுப்புச் சுவர்கள் இடிந்த நிலையிலும், மேல் மூடி சேதமடைந்த நிலையிலும் உள்ள நிலையில் இந்த பொது கிணற்றை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் தனி நபரின் நிலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஊராட்சி நிர்வாகம் பல லட்சம் ஒதுக்கீடு செய்து தகர மூடிகள் அமைத்து பராமரிப்பு செய்து ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஊராட்சி நிர்வாகம் பராமரித்துள்ள தனியார் கிணற்றிற்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த கிணற்று நீரை தனியாரை சேர்ந்த பலரும் குழாய் அமைத்து உறிஞ்சி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அக்கிரமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஊராட்சி செயலாளர் பாக்கியலட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அக்கிணறு தனியாருக்கு சொந்தமானது என்பதே தமக்கு தெரியாது எனவும் பராமரிப்பு செய்த பின்னரே தனியாருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





