அதிமுக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரான தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடக்கிறது. இதைத்தவிர வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உட்பட 9 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 2 இடங்களில் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடக்கிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்த தொழிலும் செய்யாத நிலையில் தங்கமணி மனைவி வருமான வரி கட்டியது எப்படி எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.