புஷ்பா படத்தில் ஓசொல்றியா மாமா என்ற ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி உள்ளார்.தற்போது அந்த பாடல்சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.இந்த பாடலில் வரும் வரிகள் ஆண்களை கொச்சைபடுத்தும் வகையில் உள்ளதாக ஆண்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த பாடலை தடை செய்யாவிட்டால் நடிகை சமந்தா மீதும் ,படக்குழுவினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புஷ்பா திரைபடத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.தெலுங்கில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் சந்திர போஸ் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் பாடலாசிரியர்விவேகா அனைத்து பாடலையும் எழுதியுள்ளார்.இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பாடலாசிரியர் விவேகா அளித்த பேட்டியினை பார்க்கலாம்.
“ஆண்கள் சங்கம் என்ற அமைப்பை இதற்கு முன்பு கேள்வி பட்டிருக்கிறீர்களா? சரி, ஆண்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்காக இதற்கு முன்பு என்ன போராடி இருக்கிறார்கள்? ஆண்களில் அயோக்கியர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதெல்லாம், எதிர்த்து குரல் கொடுத்தார்களா?
இதெல்லாம் விடுங்கள்! ஆண்களிலுமே கூட எளிய தரப்பு ஆண்கள் உணவுக்காக அடித்து கொல்லப்பட்டார்கள். கேரளாவில் கூட இது நடந்தது. அப்போதெல்லாம் குரல் கொடுத்தார்களா? இல்லையே! ஆண்களுக்கு முதலில் சங்கம் எதற்கு என கேட்கிறேன்! மனிதர்கள் சங்கம் என ஆரம்பிக்க வேண்டியதுதானே? ஆண் என்பவன் ஆதிக்க மனநிலையோடு நூற்றாண்டு காலங்களாக இருந்து வரக்கூடியவன்.
இதில் ஆண்கள் சங்கம் என்பதே எனக்கு வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. கேள்விப்படாத ஒன்றிற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?
நானும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களுக்கு பயணித்து இருக்கிறேன். இது போன்ற அமைப்பே இல்லையே? நானும் ஆண்தானே? ஆண் என்பதை பெண்களுக்கான எதிர்ச்சொல் போல கட்டமைத்து விடுவது தவறு.
முதலில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். இது ஆண்களை குறை சொல்லும் வகையிலான பாடல் கிடையாது. இது ஒரு Item Song! அந்த பாடலை பாடும் பெண் ஒருத்தி தன்னை நாடி வரக்கூடியவனின் பார்வை, மனநிலை ஆகியவற்றை விவரிக்கிறாள். அவளுடைய மனநிலையில் இருந்து தன்னை நாடி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை சொல்கிறாள்.
மற்றபடி ஒட்டுமொத்த ஆண்களுமே இப்படிதான் என்று சொல்லவில்லை. ஆண்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஒரு ஆணே இப்படி பாடும்போது நீங்கள் இந்த கருத்தை வைத்தால் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இதில் ஒரு பெண் தன்னை நாடி வரக்கூடியவர்களின் மனநிலையை விவரிக்கிறாள். அப்படிதான் இதை புரிந்து கொள்ள வேண்டும்”. என்றார்