• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

துரைமுருகனின் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!…

Byமதி

Oct 1, 2021

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரை நம்பிக்கை துரோகி என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றுக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால், வரலாறே ஒரு சிலரைத் தான் தனக்கு சொந்தமாக்கி கொண்டது. அந்த ஒரு சிலரில் ஒருவர் தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர்.’ என்றும், ‘நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்றும் பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதியை முதலமைச்சராக்கிய, எம்.ஜி.ஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கண்டனத்துக்கு உரியது.

திமுக கடந்து வந்த பாதையையும் தான் கடந்து வந்த பாதையையும் மறந்துவிட்டு துரைமுருகன் பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா என்று தெரியவில்லை. திமுக என்ற கட்சி ஆட்சிப் பீடத்தில் அமருவதற்கும் கருணாநிதி முதலமைச்சர் ஆனதற்கும் காரணமான எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதிதான் நம்பிக்கை துரோகி என்றும், காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்றது, தமிழ் நாட்டு மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப் பெரிய துரோகம் என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.