• Tue. Apr 23rd, 2024

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்குப் பதிவு செய்த நிர்வாகி.., அதிர்ச்சியில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்..

Byவிஷா

Dec 6, 2021

நாளை நடைபெறவிருக்கும் (டிச.7) அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் வழக்கறிஞர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஜெயச்சந்திரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இருவரும் நாளை போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.


இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயசந்திரன் சார்பில் வழக்கறிஞர் பிரசாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, மனுவே தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மனுத்தாக்கல் செய்து, பதிவுத்துறை நடைமுறைகள் முடிந்தால் விசாரிகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


முன்னதாக, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *