சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகளை கொண்ட இயற்கை வேளாண் கண்காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்து அதற்கான பதிலை அதிகாரியிடம் பெற்று தெரிந்து கொண்டு செல்வது, அதேபோல் வேளாண் குறித்த புதிய அறிவிப்புகளை தெரிந்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். தற்போது இந்த தடவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகளை கொண்ட இயற்கை வேளாண் கண்காட்சி விவசாயிகளையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அதாவது ஒருபுறம் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்களும், மற்றொரு பக்கம் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி விளைந்த பழவகை, காய்கறி மற்றும் கீரை வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். அதேபோல் 250-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு நெல் ரகங்களின் சிறப்பு அதன் மருத்துவ குணம் போன்றவையும் அதில் இடம்பெற்றிருந்தது.