உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேக வைபவம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எனக் களைகட்டும் திருவிழாவைத் தரிசிக்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை மாநகரில் திரள உள்ளனர்.
15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கள்ளழகருக்கான திருவிழா என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் மே 5 ஆம் தேதி காலை 5.45 முதல் 6.12 க்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் கள்ளழகருக்காக திருமலை நாயக்க மன்னரால் ஆயிரம் பொன்செலவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட அழகான ஆயிரம் பொன் சப்பரத்தை திருக்கோவில் நிர்வாகம் மீண்டும் தயார் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக பராமரிப்பு எதுவும் செய்யப்படாததால் சப்பரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அழகர் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடக்காமல் இருந்தது. ஆனாலும் இந்த ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் பணியை சம்பிரதாயமாக கோவில் நிர்வாகம் ஆண்டுதோறும் செய்து வருகிறது. இந்த நிலையில், 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரம் பொன் சப்பரம் பாரம்பரிய முறைப்படி தயாராக உள்ளது. இந்த ஆண்டு ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.