நேற்று தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ள, நடிகர் விஜய்க்கு அவரது தாய் ஷோபாசந்திரசேகர், ‘வாகை சூடு விஜய்’ என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு. நாடாளுமன்ற தேர்தல் இலக்கு கிடையாது. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவும் கிடையாது என அதிரடியாக கட்சி ஆரம்பித்து, அறிவித்துள்ள நடிகர் விஜய்க்கு ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் இலக்கு கிடையாது என கூறினாலும், எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார் என்கிற யூகங்கள் இப்போதே துவங்கி விட்டது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வரும் நிலையில், விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், “ தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வர வேண்டும் என்று நினைப்பவர் விஜய். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு உள்ளது. சாதி, மதத்தில் உடன்பாடு இல்லாதவர். வாகை சூடு விஜய்” என கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை ஷனம் செட்டி , “ வா தலைவா..தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துகள் விஜய் சார். நாங்கள் உங்களை உண்மையாக நம்புகிறோம். நீங்கள் அனைவருக்கும் சமமான, ஊழல் இல்லாத, சாதிமத பேதமில்லாதவராக இருப்பீர்கள்” என தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.