கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகரும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான நடிகர் சிவக்குமார், அவரது இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில், பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி, அரசுப் பள்ளிகளின் தரம் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு இணையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உயர்தரக் கல்வி வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குகிறார்கள்” என்று பெருமிதத்துடன் கூறினார். அப்போது, தனது தந்தை சிவக்குமாரின் சகோதரி நடிகர் கார்த்தியின் அத்தை இளமைக் காலத்தில் பள்ளிக்குச் செல்லவும், கல்விக் கட்டணம் செலுத்தவும் முடியாமல் சிரமப்பட்ட சூழலை நினைவுகூர்ந்து மேடையில் கண்ணீர் மல்கினார். மேலும், பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். கார்த்தி கண்ணீர் விட்டுக் கலங்கியதைக் கண்ட சிவக்குமார், அவரை ஆற்றுப்படுத்தி அமர வைத்தார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.

பின்னர் பேசிய நடிகர் சிவக்குமார், சிறுவயதில் ஆசிரியர்களைப் பார்த்து அவர்கள் போல ஆக வேண்டும் என்பதற்காக பாடங்களை மனப்பாடம் செய்து படித்தேன். என் உருவம் தத்ரூபமாக இருந்ததால் ஓவிய ஆசிரியராக வேண்டும் என்று ஓவியம் பயின்றேன். கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனங்களைக் கேட்டு திரையுலகில் செல்ல வேண்டும் என்று நினைத்து, அவர் வசனத்தையே பேசி நடித்தேன் என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, கலைஞர் வசனம் ஒன்றைக் கூறி, அது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தெரிகிறதா என்று கேட்டு, மேடையில் நடித்துக் காட்டினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விழாவில் இறுதியாகப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற மாணவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பீடு செய்வது மாணவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவம் உண்டு. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதிக நிதி பெறும் துறையாக பள்ளிக்கல்வித் துறை உள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், அதற்கேற்ப நேர்மையும் ஒழுக்கமும் அவசியம் என்று தெரிவித்தார்.