காமெடி நடிகர் போண்டாமணி வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் இப்போது வரை மக்களுக்கு பிடித்த நகைச்சுவையாக இருக்கிறது.
இப்படி காமெடி செய்து பலரை சிரிக்க வைத்த போண்டாமணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது ” அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் இப்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஏழை கலைஞர் அவர்… இந்த காணொளியை முதல்வர் பார்க்க வேண்டும் … தயவுசெஞ்சி உதவி பண்ணுங்க…இலங்கையிலிருந்து அனாதையாக வந்த அவர் அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க என கண்ணீருடன் பேசியுள்ளார். பெஞ்சமின் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.