திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில நாட்களாக ரோபோ ஒன்று உணவு பரிமாறும் வீடீயோ வைரலாகி வருகிறது.
இது குறித்து இந்த உணவக உரிமையாளர்,
“கடந்த சில நாட்களாக ஒரு சர்வரின் பணியை ரோபோ செய்து வருகிறது. சமைத்த உணவை சமையல் கூடத்தின் முன்பு நின்றிருக்கும் ரோபோவில் வைத்துவிட்டால், எந்த டேபிளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அசைன் செய்துவிட்டால் அந்த டேபிளுக்கு சென்று நிற்கும். அதன்பின்னர் அங்கிருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த உணவை எடுத்துக் கொள்கின்றனர்.
தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். தொடர்ந்து 8 மணிநேரம் இதன் பேட்டரி செயல்படும். குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதை விட, ரோபோவின் நடமாட்டத்தை பார்க்கவே பலர் வருகை தருகின்றனர். இந்த உணவகத்தில் மொத்தம் 40 டேபிள்கள் உள்ளன. ரோபோவில் 5 அடுக்குகள் உள்ளன. அதில் உணவை வைத்துவிட்டால், அந்தந்த டேபிளுக்கு சென்று நிற்கும். எந்தெந்த டேபிளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அசைன் செய்தால் போதும். அந்தந்த டேபிளுக்கு உணவை கொண்டு செல்லும். அவர்கள் உணவை எடுத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் க்ளோஸ் செய்து விடலாம். உடனே இந்த ரோபோ அடுத்த டேபிளுக்கு நகர்ந்துவிடும்.
இந்த ரோபோ சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ8.50 லட்சம். வாடிக்கையாளர்களை கவரவே இந்த புதிய ஏற்பாடு. பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ரோபோ பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளனர்.