பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி தன்னை சூரியக் கடவுள் என்று அழைத்துக் கொண்டான். இவன் காலத்தில் வீண் ஆடம்பரத்தை பறை சாற்றும் விதத்தில் கட்டப்பட்டது தான் வெர்சேல்ஸ் மாளிகை. இந்த மாளிகை பிரான்ஸ் நாட்டையே திவால் ஆக்கி கட்டப்பட்ட மாளிகை ஆகும். இதனைக் கட்டி முடிக்க 50 வருடங்கள் ஆயிற்று. அதிலும் பல அப்பாவி மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கொள்ளை நோய் தாக்கி இறந்தனர்.
இந்த மாளிகையில் மன்னனின் மேற்பார்வையில் 250 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைக்கப்பட்டது. ஏராளமான நீர் ஊற்றுகள், மிருகக் காட்சி சாலைகள், பூங்காக்கள் என இந்த மாளிகையில் அனைத்தும் இருந்தது. இது தவிர பிரம்மாண்டமான கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டு அதில் படகு விடப்பட்டது. 1682ல் அரசர் தனது பரிவாரங்களுடன் இந்த மாளிகைக்கு குடி ஏறினார். 1789 ஆம் ஆண்டு வரையில் வெர்சேல்ஸ் தான் பிரான்சின் தலை நகரமாக இருந்தது. இங்கு கடல் போன்ற படையும் பராமரிக்கப்பட்டது. இப்படியாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அரசன் மறைந்த பிறகு அவனது மகன் 15 ஆம் லூயி மேலும் பல கட்டடங்களை கட்டினான். அதன் பிறகு வந்த 16 ஆம் லூயியும் பல அபிவிருத்திகளை செய்தான்.
இந்தக் கோலாகல வாழ்க்கைக்கு 1779ல் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சி முற்றுப் புள்ளி வைத்தது. அந்தப் புரட்சியின் சமயத்தில் மாளிகையில் இருந்த பல பொருட்கள் களவு போயின. இறுதியில் அப்படிப் பார்த்துப் பார்த்து கட்டிய மாளிகை பராமரிக்க முடியாமல் சிதிலம் அடைந்து போனது. பிறகு 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் உதவி உடன் அந்த மாளிகை பழுது பார்க்கப்பட்டு இன்று அது ஒரு அருங்காட்சியமாக உள்ளது. இந்த மாளிகையில் 1400 நீரூற்றுகள் இருப்பது இன்னொரு சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.