இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யபட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் தான் ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த விசாரணை அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.