• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் புதிய திருத்தேர்” பூஜையுடன் திருப்பணி கோலாகலத் துவக்கம் !!!*

BySeenu

Jun 1, 2026

கோவையின் புகழ்பெற்ற, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில், பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பெரிய தேரின் உறுதித்தன்மை குறைந்ததைத் தொடர்ந்து, சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான “பாலக்கால் பூஜை” இன்று நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இந்த திருப்பணியை முறைப்படி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

​கோவை நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்து உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது, சுவாமியும் அம்மனும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வரும் பெரிய தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

கடந்த பல ஆண்டுகளாகப் பக்தர்களால் இழுக்கப்பட்டு வந்த இந்த பிரதான பெரிய தேரின் மரக்கட்டைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மையில் (Fitness) அண்மையில் குறைபாடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

​பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பாரம்பரியப் பெருமையைக் காக்கும் பொருட்டு, பழைய தேருக்குப் பதிலாக உலகத்தரம் வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய பிரம்மாண்ட தேரை உருவாக்கக் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காகச் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய தேர் செய்ய திட்டமிடப்பட்டது.

​அதன்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை புதிய தேர் செய்யும் பணிக்கான மங்களகரமான பாலக்கால் பூஜை (Balakal Poojai) நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்தச் சிறப்புப் பூஜையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு, புதிய தேருக்கான மரக்காலிற்குப் புனித நீர் ஊற்றி, திருப்பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

​இந்த ஆன்மீக நிக்ழ்ச்சியில், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.பி.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் விமலா, மண்டல உதவி ஆணையர் உஷா நந்தினி, பேரூர் கோவில் உதவி ஆணையர் சத்யவதி மற்றும் திருத்தேர் ஸ்தபதி, வடிவமைப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

​புதிய தேர் செய்யும் பணி இன்று முதல் தீவிரமடைய உள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பங்குனி உத்திரத் தேரோட்டம், புத்தம் புதிய கம்பீரமான திருத்தேரில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சூழ அரங்கேறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.