ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் ‘சலார்’ என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் மது குருசாமி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில், கொச்சியில் நடைபெற்ற ‘ராதே ஷ்யாம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாகுபலி நடிகர் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தன்னுடன் சலார் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, சலார் படத்தில் பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.