உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். குறைந்தபட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இரண்டு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து பயணம். கல்லூரி மாணவிகளுக்கு இலவச இருசக்கர வாகனங்கள். விதவைகளுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ 1,500-ஆக உயர்த்தப்படும்.’ உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
இது தவிர மாநிலத்தின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் அந்த தேர்தல் அறிக்கையில் அடங்கும். தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட பின்பு பேசிய அமித் ஷா, “முஸ்லிம் ஆண்கள் இந்துப் பெண்களை மயக்கி அவர்களை மதமாற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளிகளுக்கு எதிராக, கடந்த நவம்பரில் யோகி ஆதித்யநாத் அரசு இயற்றிய அவசரச் சட்டத்தின் படி, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.