அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம் வளர்ச்சிக்கு அறிகுறி அது, நாம் மக்கள் வனவிலங்குகள் அல்ல, இது நாடு, காடு அல்ல, காட்டு முறையை கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகம் ஆகாது. பாசிச முறை அது, என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
அண்மையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதை நிறைவேற்ற முடியாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்ற நிலையில் அதனை மூடி மறைத்து உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும் கழகத்தின் தீவிர செயல் வீரருமான திரு.கே.சி வீரமணி அவர்களுடைய வீட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக “ஸ்டாலின் போலீசார்” சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை, ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் கழக முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், கோவை எஸ்.பி வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து ஜோலார்பேட்டைகே. சி வீரமணி அவர்கள் வீட்டிலும் அவரது நண்பர்கள் என்று விடிய அரசின் போலீசார் முடிவு செய்த சுமார் 28 இடங்களிலும் என்று சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்று கொண்டிருக்கிறது, உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர்கள் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதத்தில், முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தில் முதற்படியாக இன்று கே.சி வீரமணி அவர்கள் வீட்டில் நடத்தப்படும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலம் ஆகவே அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் பார்க்கிறார்கள்.
இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தமான கழக செயல் வீரர்களும் என்றும் அடிபணிந்ததில்லை, சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அம்மாவின் வழிவந்த அம்மாவின் அரசு சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம், வெற்றி பெறுவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது, அதற்கு நிதி பற்றாக்குறை என்பதும்,
நீட் ஒழிப்புக்கு மத்திய அரசின் மூலம் மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் தான் முடியும் போன்ற சாக்குப் போக்குகளை கூறாமல், தேர்தல் சமயத்தில் அளித்த 505 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழ்நாடு சிறந்த நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, உணவு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து முக்கியமான துறைகளிலும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்தது. அதுபோலவே தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடிய திமுக அரசை கேட்டுக்கொள்கிறோம். என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.