அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் கிடையாது என்றும், அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கூடல் புதூர் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே அவர்களின் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் திமுக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
லஞ்ச ஒழிப்பு துறை கடந்த வாரம் பத்திர பதிவு துறையில் கூட சோதனை நடத்தி உள்ளார்கள். எனவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனையில் எந்த உள் நோக்கமும் கிடையாது.இது சட்ட நடவடிக்கை; இதை அரசியலாக்க வேண்டாம்.
மாரிதாஸ் விவகாரத்தில் தேவைப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
திமுக மாவட்ட செயலாளர்கள் வசம் காவல்துறை உள்ளதாக அண்ணாமலை சொல்வது தவறு. யார் தவறு செய்தாலும் காவல்துறை தண்டிக்கும். திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுகிறது. ஒன்றிய அரசிடம் தமிழகத்திற்கு தேவையானதை முதலமைச்சர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்.
மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் தவறாக பதிவு செய்யபட்டு இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறான பதிவுகளை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு அமலுக்கு வந்தால் இது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.