பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே மருத்துவமுகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரை துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு , அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த மிருணாளினி மாவட்டத்தின் 18வது ஆட்சியராகவும், 5வது பெண் ஆட்சியராகவும் இன்று பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (30.08.2025) பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனை செய்த 05 நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், 05 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 15 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும், சித்த மருத்துவத்துறையின் சார்பில், 01 கர்ப்பிணிப்பெண்ணுக்கு சஞ்சீவி பெட்டகமும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் தாங்கள் எவ்வித சிகிச்சைக்காக வந்துள்ளீர்கள் என கேட்டறிந்து அது தொடர்பான மருத்துவ சிகிச்சை வழங்கிடுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து, கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் அறிந்து, பயன்பெறும் வகையில் தேவையான விளம்பர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு எவ்வகையான சிகிச்சைக்கு செல்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்து, தன்னார்வலர்கள் மூலம் தொடர்புடைய அறைக்கு அழைத்துச்சென்று வழிகாட்ட வேண்டும். எனவும், பொதுமக்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனித்தனியாக சிகிச்சை மேற்கொள்வதற்கு சென்று சிரமப்பட்டு வரும் நிலையில், அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் முகாம் நடக்கின்றன. ஒவ்வொருத்தரும் அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்து கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பயனடையலாம். கிராமப்புறங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
