மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி, வேப்பனுத்து பகுதியில் கிணற்று பாசனத்தை வைத்து 100க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில், ஒரு சில விவசாயிகள் அடிக்கடி மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் சேதமடைந்து விடுமோ என அறுவடை பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று பாறைப்பட்டியில் கொள்முதல் நிலையம் அனுமதி வழங்க முடிவெடுத்து அதற்கான பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கொள்முதல் நிலையம் அமைக்க கால தாமதம் ஆவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களின் அருகிலேயே நெல்மணிகளை குவித்து வைத்து பாதுகாத்து வருவதாகவும், உரிய பாதுகாப்பின்றி காணப்படும் இந்த நெல்மணிகள் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முளைக்க ஆரம்பித்து சேதமடைந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதோடு, பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








