ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த வந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யா நாட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதனை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது.
இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லை பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனிற்கு உதவ, அங்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ வீரர்களை நேட்டோ கூட்டமைப்பு நிலை நிறுத்தினால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தார். இதனால் இரு நாடுகளுக்கும் போர் சூழல் ஏற்படலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளனர். இந்த கலந்துரையாடலை பற்றி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியது “ரஷிய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் விரிவான முயற்சிகளை எனது நிா்வாகம் ஒருங்கிணைத்து வருகிறது. அந்த நடவடிக்கையானது ரஷிய அதிபா் புதினுக்கு மிக கடினமான ஒன்றாக அமையும்” என்று தெரிவித்தார். இந்த செய்தியின் மூலம் ரஷ்யா அதிபருக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜோ பைடன்.இருப்பினும், ‘ரஷியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க திட்டமிடுகிறது; அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் நாங்களும் எதிா்வினை ஆற்றுவோம்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொஜி லாவ்ரோவ் தெரிவித்தாா்.