வார விடுமுறை, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
இதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 28-ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், வனம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக்கோரிக்கை நடந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள்( சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் பண்டிகை) விடுமுறை அறிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 1) சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இக்கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.
அதனைத் தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை) மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். இதற்கு துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளிப்பதுடன் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.