• Wed. Apr 23rd, 2025

டெல்லி தெருக்களில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு புகார்!

ByP.Kavitha Kumar

Apr 1, 2025

டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஓசூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா பதிவிட்டிருந்தார். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் டெல்லிக்கு ரகசியமாக சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்ததாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. செங்கோட்டையனிடம் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அவ்வாறு சந்தித்து பேச வேண்டி இருந்தால் நான்கு எம்எல்ஏக்களைக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து சந்தித்திருக்க வேண்டும். இதுவரை டெல்லி சென்றதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரா?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமர்ந்திருப்பது போல உள்ள பழைய புகைப்படங்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மேலும் அமித்ஷா 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற பதிவுக்கு பின்னர் அதிமுக தலைவர்கள் குறிப்பாக டெல்லி சென்று வந்த தலைவர்கள் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என பொதுவெளியில் தெரிவிக்காதது ஏன்?

எனவே, செங்கோட்டையனை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் செயல்பாடு களுக்கு அதிமுக இரையாகக் கூடாது. 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பின்னர் ஏன் அவர் குறித்து தேவையில்லாமல் இப்படிப்பட்ட புரளி கிளப்பி விடப்படுகிறது என்று வினா எழுப்பினார்.