• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

Byவிஷா

Jan 29, 2025

புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் கடந்த 26-ம் தேதி காலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர். இவர்கள் 27ந்தேதி இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 5 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் படுகாயமடைந்த 2 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், இதுவரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய மீனவர்கள் கைது சம்பவத்தின்போது இலங்கை கடற்படையினரின் உத்தரவுகளை மீறி இந்திய மீனவர்கள் செயல்பட்டனர். மேலும் மீன்பிடி படகை வேகமாக செலுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரை தாக்கவும், கடற்படை வீரர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு சம்பவம் தவறுதலாக நடந்துள்ளது. மேலும், காயமடைந்த இரு மீனவர்களுக்கு கடற்படை முதலுதவி அளித்து உடனடியாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், துப்பாக்கிசூடு விவகாரத்தில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இருவர் படுகாயமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த 2 மீனவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் (பொறுப்பு) தூதரை அழைத்து தனது எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்த பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மீனவர்கள் மீது கடற்படையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் இலங்கையின் இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மேலும், மீன்பிடி தொழில் தொடர்பாக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்றும் இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.