நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாளை பிப்ரவரி 1ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த முறை சுற்றுலாதுறை குறித்து சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. எதிர்வரும் நாட்களில் கோடை விடுமுறை வர இருக்கிறது. அதேபோல தேர்தலும் நெருங்குவதால், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பல்வேறு அமைப்பு சாரா துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். வருமானமும் அதிகரிக்கும். எனவே சுற்றுலாத்துறையை மையப்படுத்தி அதிக அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக இந்த துறை சார்ந்த பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
அதேபோல சுகாதாரத்துறையிலும் அதிக அளவு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி என இரண்டுக்கும் சேர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கை. அதேநேரத்தில் உலக சுகாதார மையமும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து அடிக்கோடிட்டிருக்கிறது. எனவே இந்த முறை ஜிடிபியில் 2.5 சதவிகிதம் அளவுக்கு சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.