கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பரசன் இன்று திடீரென தமது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை.
இதனால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார். கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவராக இருப்பவர் அன்பரசன். இதனை காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திடம் சென்று அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரினார் எடப்பாடி பழனிசாமி. இதனடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது.தற்போது பாஜக கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.
இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் இந்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.