கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டார் சுப்ரீம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் காலி மனை இடத்தில், தொடர்ந்து மர்ம நபர்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தீ வைப்புச் சம்பவங்களால் வெளியாகும் நச்சுப் புகை ஒட்டுமொத்தப் பகுதியையும் சூழ்ந்து கொள்வதால், நள்ளிரவு நேரங்களில் பொதுமக்கள் மூச்சு விடக் கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ஸ்டார் சுப்ரீம் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தற்போது அவசரப் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், “தனியார் காலி மனையைச் சிலர் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி வருவதுடன், அதனை எரிப்பதன் மூலம் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலையும் கெடுத்து வருகின்றனர்.
இந்தக் கடுமையான புகையால் குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் நடக்கும் இந்தத் துணிகர அராஜகத்தைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குப்பை கொட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் புகார் மனுவில் கூறி உள்ளனர்.



