சென்னையில் பாஜகவின் ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க முயன்ற மாவட்ட செயலாளரிடம் இருந்து கரு.நாகராஜன் திடீரென மைக்கை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர் என கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து நேற்று பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் விஜய் ஆனந்த்;..,
இன்று தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சி என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசியததற்கு கரு.நாகராஜன் கைதட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திறனற்ற எடப்பாடி, ஆளுமையில்லாத எடப்பாடி என்று பேசத்தொடங்கியதும் உடனே அவரிடமிருந்து கரு.நாகராஜன் மைக்கை பிடுங்கினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.