சமீப காலமாக தொடர்ச்சியாக பாஜக பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்துள்ளார். அதே போல மற்றொரு பாஜக நிர்வாகியும் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது மதுரையில் மற்றொரு நிர்வாகியும் அதிமுகவில் இணைந்துள்ளார். அந்தவகையில் தற்போது, திருப்பரங்குன்றம் பாஜக மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ராமநாதன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.பின்னர் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் பலர் பாஜகவிலிருந்து விலகக்கூடும் என்ற தகவல் பரவிவருவதால் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.