கோவையில் நடைபெறும் விசைத்தறித் தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, அங்கு ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். இதனையொட்டி காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பயணம் செய்யும் வழியில் மற்றும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறும் மேடை வரை 2 ஆயிரத்து 700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 7 மாவட்ட எஸ்பிக்கள் இரண்டு டிஐஜி, 7 ஏ.டி.எஸ்.பி, 27 டிஎஸ்பி தலைமையில் 2 ஆயிரத்து 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்படும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.