கலைஞரின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்..,
“கோயில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செய்யப்படும் என நம்பிக்கை இருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு பிறகு திருக்கோவிலுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை கிடைத்துள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? எல்லோருக்கும் கைகள் இருக்கு. இந்த பதிலே அவருக்கு போதும் என்றார்.