• Fri. Mar 29th, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை;போதை மகனின் வெறிச்செயல்

டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் தரை பகுதியில் ஒரு பெண், குளியறையில் 2 பேர் உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. உடல்களை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த கேசவ் (வயது 25) என்ற வாலிபர் தனது தந்தை தினேஷ் (50), தாய் தர்சனா, மற்றும் பாட்டி தேவானா தேவி(75), தங்கை ஊர்வசி சைனி (18) ஆகியோரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது கண்டு பிடிக்கப்பட்டது.
கொலையாளி கேசவ் போதை பொருட்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதுதொடர்பாக அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு தான் கேசவ் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் தான் நேற்று இரவும் கேசவ் தனது குடும்பத்தினருடன் மீண்டு தகராறு செய்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் பணம் கேட்டதாகவும் அவர்கள் கொடுக்க மறுத்து உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது தந்தை உள்பட குடும்பத்தினர் 4 பேரையும் குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கேசவை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *