சொத்துக்குவிப்பு தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை தலைமைச்செயலக அதிகாரி ராம்மோகன் ராவ் வீடு சோதனை ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு வருமான வரிச்சோதனை என தமிழகத்தில் தொடர் சோதனைகள் நடைபெற்றது. தற்போது முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் பெரும்பாலான மாநிலங்களில் வருமான வரிச்சோதனை நடைபெறுவதில்லை. பெரிய பெரிய வியாபார நிறுவனங்களில் நடைபெறுவதில்லை. ஆனால் அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் அரசியல் தலைவர்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள வருமான வரித்துறையை பாஜக ஒன்றிய அரசு ஒரு கைபானமாக பயன்படுத்தி வருகிறது. அதன் பின்னணியில் தற்போது பாஜக வலையில் சிக்கியிருப்பது எம்.ஆர்.விஜயபாஸ்கர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஒரு பேட்டியில் விரைவில் பாஜக பெரும் சக்தியாக வளரும் என்றார். பொதுவாக பாஜக ஒரு மாநிலத்தில் கால் பதித்தால் பெரிய கட்சியுடன் உறவு வைத்து அந்த கட்சியை சிதைத்து அதில் உள்ள தலைவர்களை தங்கள் கட்சியி;ல் இணைத்துக்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ரெய்டு நாடகம். அடுத்து கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை உள்ளிட்ட பலரை வளைத்துப் போடவும் இதே போல ரெய்டு நாடகம் நடைபெறலாம். கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக தலைவர்கள் உஷாராக இருப்பது நல்லது.