




ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு உணவும், தங்குமிடமும் அளித்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மாக்ரே (23) என்ற இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பயங்கரவாதிகளுக்கு உணவும், தங்குமிடமும் அளித்ததாக நேற்று முன்தினம் சனிக்கிழமை இம்தியாஸ் அகமது மாக்ரேயை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, குல்காமில் உள்ள தாங்மார்க் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். நேற்று காலை பதுங்குமிடத்திற்குச் செல்லும் வழியில், அவர் போலீஸ் மற்றும் இராணுவத்தினரை ஏமாற்றி தப்பிக்க முயன்று வெஷாவ் ஆற்றில் குதித்தார்.
இம்தியாஸ் அகமது மாக்ரே தப்பித்து ஓடி பாறையின் மேலிருந்து ஆற்றில் குதிக்கும் காட்சிகள், நீந்த முயற்சிப்பது போன்றவை வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், வேகமான நீரோட்டம் காரணமாக அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

