• Thu. Apr 18th, 2024

கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி தலைவர் யார் ? கள ஆய்வு……

நகர்புற உள்ளாட்சி தேர்தலின் உஷ்ணம் நீலகிரி மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வை பொறுத்தவரை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி உடன்ப் பிறப்புக்களின் கவனம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மீது திரும்பியுள்ளது.

மேலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே தலைவர் பதவி ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்கிற குழப்பத்தில் கணவன் மனைவி என இருவருமே போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.மஞ்சூரை தலைமையிடமாக கொண்ட கீழ்குந்தா பேரூராட்சியின் களநிலவரமாக பார்த்தால், தலைவர் பதவிக்கு போட்டியிட எஸ்.சி., பெண்கள் என குறிப்பிடபட்டுள்ளது. ஆனாலும், கடைசி நேரத்தில் எஸ்.சி., பொதுவாக மாற வாய்ப்புள்ளதாகவும், அரசியல் விமர்ச்சகர்கள் சொல்கிறார்கள்.

தி.மு.க., கீழ்குந்தா பேரூராட்சியில் தலைவர் பதவியை குறிவைத்து ஐந்து பேர் களமிறங்கி விருப்ப மனு அளித்துள்ளனர்.அதில் கீழ்குந்தா பேரூராட்சியில் ஏற்கனவே பத்தாண்டுகள் தலைவராக இருந்த சின்னான் இம்முறை எப்படியாவது சீட்டு வாங்கி வெற்றி பெற்று மீண்டும் பேரூராட்சி தலைவராகி விடவேண்டும் என்பது இவரின் இலக்கு அதற்காக கரியமலை வார்டில் கவுன்சிலராக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இவர் வசிக்கும் காந்திபுரம் வார்டில் இவர் போட்டியிட விருப்பம் தெரிவிக்காதது குறிப்பிடதக்க விஷயம்.

சங்கர்

ஒரு வேளை தலைவர் பதவி எஸ்.சி., பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்கிற அறிவிப்பு வந்தால், அதற்கும் தயார் நிலையில் அவரது மனைவி நாகம்மாளை கெத்தை வார்டில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். நாகம்மாள் ஏற்கனவே கீழ்குந்தா பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்.மேலும் தி.மு.க., சார்பில் தலைவர் பதவிக்கு சீட்டு கேட்டு குந்தா பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்த சங்கர் தி.மு.க.,வில் தீவிரமாக இறங்கி பணியாற்ற விருப்ப ஒய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் பதவிக்காக காந்திபுரம் வார்டில் விருப்ப மனு அளித்துள்ளார். இவர் சின்னானின்(சித்தப்பா மகன்) தம்பி என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பவானிசாகர் ( தனி) தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட சீட்டு கேட்ட நிலையில், பவானிசாகர் தொகுதி கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் க்கு வழங்கப்பட்டது. இதனால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.

இம்முறை கீழ்குந்தா பேரூராட்சி தலைவராக போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். பெண்களுக்கு மாறும் பட்சத்தில் இவரது மனைவி காஞ்சனாவிற்கு வாய்ப்பு கேட்டு முன்னதாக கெத்தை வார்டில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.கெத்தை வார்டில் தலைவர் பதவியை குறிவைத்து தி.மு.க., சார்பில் சின்னானின் மனைவி நாகம்மாள், சங்கரின் மனைவி காஞ்சனா ஆகிய இருவரும் களமிறங்கியுள்ளனர்.இதில் நாகம்மாள் ஏற்கனவே தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

டி.கே.எஸ்.பாபு

மொத்தத்தில் கீழ்குந்தா பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட அண்ணனுக்கும், தம்பிக்கும், கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே கீழ்குந்தா பேரூராட்சியில் துணை தலைவராக இருந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், கீழ்குந்தா பேரூர் கழக செயலாளருமான டி.கே.எஸ். பாபுவும் தலைவர் ரேசில் இருக்கிறார். இவர் இம்முறை பள்ளி மனை வார்டில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். தலைவர் பதவிக்கு பெண்கள் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், துணைத் தலைவர்பதவியை பிடிக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.இதெல்லாம் ஒரு புறமிருக்க அ.தி.மு.க.,வின் நிலைப்பாடுகள் குறித்து அறிய முனைந்த போது, கீழ்குந்தா பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், பெரும்பாலான வார்டு இன்னமும் விருப்ப மனுக் கூட யாரும் அளிக்கவில்லை என்கிற அதிர்ச்சியான தகவலை அக்கட்சியின் மூத்த முன்னோடி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து குந்தா ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் வசந்தராஜனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், “கீழ்குந்தா பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அண்களா?பெண்களா? என்பதே தெளிவாகவில்லை அது தெரிந்தால் எங்கள் தரப்பு வேட்பாளரை சொல்லி விடுவோம்” என்றார்.

பிக்கட்டி பேரூராட்சி……

19 குக்கிராமங்களையும், 15 வார்டுகளையும் உள்ளடக்கிய பிக்கட்டி பேரூராட்சி குந்தா தாலூக்காவுக்கு உட்பட்டது.

சின்னான்

பிக்கட்டி பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்காக ஒதுக்கபட்டுள்ளது இந்நிலையில் இங்கு தி.மு.க., தரப்பில் பிக்கட்டி பேரூராட்சி தலைவராக போட்டியிட மூன்று பேர் சீட்டு கேட்கிறார்கள். அதில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் விருப்ப மனு அளித்துள்ளார். மேலும் ஏற்கனவே பிக்கட்டி பேரூராட்சி கவுன்சிலராக இருந்த ஒசட்டி புத்தி நடராஜு ம் வாய்ப்பு கேட்கிறார். இவர்களுக்கிடையே எட்க்காடு மூர்த்தியும் தலைவர் ரேசில் உள்ளார். இதில் ஒன்றிய செயலாளர் பரவசிவனுக்கு வாய்ப்புகள் பிரகாசம் என அப்பகுதி உடன்பிறப்புகள் வாய்பட பேசி வருவதை கேட்க முடிகிறது.

பிக்கட்டி பேரூராட்சியை பொருத்தவரை ஆதிதிராவிடர்கள் வசிக்கும் காலனிகள், கோத்தர் பழங்குடியின மக்கள் போன்றோரின் ஆதரவையும், வாக்குகளையும் பெரும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.பிக்கட்டி, கீழ்குந்தா ஆகிய இரு பேரூராட்சிகளில் ஒன்று அமைச்சர் தரப்புக்கும், மற்றொன்று மாவட்ட செயலாளர் தரப்புக்கும் என பேசி முடிவெடுக்க கூடும் என்ற ரகசிய தகவலும் கசிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *