திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே இந்த அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என மக்கள் காத்திருந்தனர். இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கொரோனா நெருக்கடி நிலையில் அதிக அளவில் செலவுகளை குறைத்தாலோ, உடனடியாக வருவாயை அதிகரித்தாலோ பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற நிலையிலும், ஏழை எளிய மக்களின் நலனுக்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பால் தமிழகத்தில் அதன் விற்பனை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்த பின்னர், ஒரு நாளைக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளதாக பேரவையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பிடிஆர் தெரிவித்துள்ளார்.