வரத்து குறைவால் கோவையில் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மார்கெட்டிற்கு தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா என தினமும் 20 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு வரும் நிலையில், உள்ளூர் சில்லறை வியாபாரிகள் பூமார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் பருவ மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பூக்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை ரூ.1100 க்கும், ரூ.200 க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.900 க்கும், ரூ.200 க்கு விற்பனையான முல்லை ரூ.800 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், சம்பங்கி ரூ.150, ரோஜா கட்டு ரூ.200, பன்னீர் ரோஜா கட்டு ரூ.120, செவ்வந்தி ரூ.150, பிச்சி ரூ.100 என விலை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இது மட்டமல்லாது நார் விலையும் அதிகரித்துள்ளது. தொடர் பண்டிகைகள் வருவதால் திருமண சீசன் உள்ள நிலையில், தேவை அதிகரித்து, வரத்து குறைவால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபார்கள் தெரிவிக்கின்றனர்.