சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது.
காலை முதலே மந்த நிலையில் காணப்பட்ட வாக்கு பதிவு இப்போது வரையிலும் குறைவாகவே உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 3.96% பதிவானது. இது தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகளும் பதிவானது. காலை முதலே சென்னையில் வாக்குப் பதிவு குறைந்து காணப்பட்டதால் மக்கள் தாங்களாக முன்வந்து வாக்குகளை பதிவு செய்யவேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தது.
இது தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் நடந்தது. இது தொடர்ந்து தற்போது பிற்பகல் 3 மணிக்காண வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மொத்தமாக சென்னையில் 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் இந்த தேர்தலில் சென்னையில் மட்டுமே குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, “சென்னையில் குறைவான வாக்குப்பதிவு என்ற அவமானத்தை ஏற்படுத்திவிட வேண்டாம். தயவு செய்து இருக்கும் சிறிது நேரத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.இன்று மாலை 5 மணியுடன் வாக்களிப்பதற்கான நேரம் முடிந்து விட்டது. அடுத்த ஒருமணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருப்பது, மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் போனதும் , எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலட்சியமும் தான் காரணம்.