தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து, ஜூலை 4ல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள், நீலகிரி, ஈரோட்டைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் திடீர் என்று பழுதாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரை மணி நேரம் அங்குள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் மின்னழுத்தம் காரணமாக வேலை செய்யவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து இன்று (மே.8) காலை மீண்டும் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கேமராக்கள் இயங்கவில்லை எனத் தகவல் வெளியானது.
காலை முதல் இடி மின்னல் காரணமாக, கேமராக்கள் இயங்காமல் போய் இருக்கலாம் எனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், உரிய விளக்கங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.