• Mon. May 20th, 2024

அரசு பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி

Byவிஷா

May 8, 2024

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி செய்யும்; வகையில், அதற்கான பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும், மாணவர்கள் நவீன தொழில்நட்பத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பள்ளிகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியும், கட்டமைப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தப் பின்னர் நடைபெற்று வந்தன. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கை துவக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது.
புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் மூலம் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் பணிகளின் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46,12,742 மாணவர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
6023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 ஆடிpள இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொளி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகச் செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு ஏற்கனவே இருந்த 5 மற்றும் 6 Mbps இணையவேகம் போதுமானதாக இல்லை என்பதால் இணைய வேகத்தை 100 Mbps என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக வீடியோ வடிவில் கற்பதற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொண்டு பாடக் கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும், உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப் பெறுவதற்கும், ஆங்கிலத்தில் மொழிப் புலமை பெற மொழி ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.
தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,267 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்த மட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு 100 Mbps அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இப்பணியானது இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பார்கள் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *